VANAKKAM Silanthinaayagam WELCOMES u !!!

Tuesday, January 10, 2012

"கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு"

கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை  என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள்  இடம்பெறும் விழா ஆகும். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன இன்றைய நாளில் அடங்கும்.

இந்த  கணுப்பண்டிகை  பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்.பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள் கொத்தினை கட்டுவார்கள் அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

"கணுப்பிடி " இந்த நாளின் சிறப்பு..அதென்ன கணுப்பிடி என்கிறீர்களா ?

ஆமாம்.. அது ஒருவகை விரதம் .
உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.
உடன்பிறந்த சகோதரர்கள் நலமுடனும் வளமுடனும்  வாழ சகோதரிகள் இன்றைய நாளில் பிரார்த்திப்பார்.

"கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு" என்பது பழமொழி.

அதாவது கார்த்திகை மாதம் எண்ணைதேய்த்துக் குளித்து விளக்குவைப்பதும், பொங்கலன்று  பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும்பொங்கல்தினம் அன்று  காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.

இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.

முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்.

ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,"காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன் ... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்..கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்....கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.
தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.

உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அவர்களை  அழைத்து  சாதம் பாயசம் செய்து விருந்து போடலாம்.

அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதனாலோ என்னவோ  இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்!

என் உடன் பிறந்த ஒருவரோடு  உடன்பிறக்காத அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் காணும்பொங்கல்  நாளில் நலம் வாழ வேண்டிக்கொள்கின்றேன்..!